வளர்ச்சி தண்டனையாகலாமா ?
ஆத்தங்கரை ஓரம் , ஒரு சிறந்த படைப்பு. சிந்தூர் என்ற பழங்குடியினர் கிராமம் வளர்ச்சி என்ற மாயயைக்குள் சிக்கி அழிவதை மனமுறுகி இயற்றியுள்ளார்.
எந்திர உலகிலிருந்து அந்நியப்பட்டு வாழ்ந்து வந்த சூழல் எவ்வளவு ரம்மியமாகவும், நகரமயமாக்கத்தின் ஒரு சின்ன முகம் எவ்வாறு ரணத்தை உருவாக்குகிறது என்பதும் உணர்த்தப்படுகிறது. அணை, ஒரே நேரத்தில் வளர்ச்சி மற்றும் அழிவின் சின்னமாக காட்சியளிக்கும் முரண் நமது அறிவியல் மற்றும் இயற்கை அறிவின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அரசியல் ஆதாயம் தேடும் கதாபாத்திரங்கள் மத்தியில் தனிப்பட்ட வாழ்க்கையை உதறிவிட்டு சமூகத்திற்காக உழைக்கும் இளைஞர்கள் நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அரசு கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு அரசையே எதிர்க்கும் துணிச்சலும் நேர்மையும் நிறைந்த அதிகாரி சுதிர் இப்பொறுப்பிற்கு வந்து சேவை செய்ய விரும்பும் பலருக்கும் முன்னுதாரனம். சர்தார் சரோவர் அணை போராட்டத்தை நினைவூட்டுகிறது இவ்விலக்கியம். நேர்மையான போராட்டத்ததையும் இயற்கையை உயிருக்கு மேலாக போற்றும் பழங்குடியினரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆவண இலக்கியமாகத் திகழ்கிறது இப்புதினம்.
"விஞ்ஞானம் என்பது இயற்கைக்கு முரணானதா? இருத்தலைச் சிதைத்து தள்ளுகிற உந்துதலும், அவசரமும், வேகமும்தான் அறிவியலா? இன்றைய உலகம் மூளையைச் சக்தி வாய்ந்ததாக மாற்ற மாற்ற இதயம் பலவீனமடைந்து விடுகிறதோ? "
- வெ. இறையன்பு
மாற்றம் என்ற மந்திரச் சொல்லே இவ்வுலகத்தை நகர்த்துகிறது. காலசூழலிற்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்கிற சமூகமே நிலைத்து நிற்கின்றது. ஆனால் அது எத்தகைய மாற்றம் என்பது முக்கியம். சமூகஉணர்வோடு அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஆக்கபூர்வமான மாற்றமா. அல்லது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்காக நிகழக்கூடிய அழிவு தரும் மாற்றமா என்று பார்க்க வேண்டும். எதிலும் பற்றும் பரிவும் இல்லாமல் ஒதுங்கி வாழ்பவர்களுக்கு இம்மாற்றம் எளிது. ஆனால் இயற்கையோடும் மக்களோடும் ஒன்றிணைந்து சமூகமாக வாழ்பவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக அமைந்துவிடுகிறது. சிலரின் ஆதாயத்திற்காக பலிகொடுக்கப்படும் வனங்களும், வளங்களும், அதன் விளைவுகளை பயனடைந்தவர்கள் பக்கமே திசை திருப்பும் என்பதை உணர்ந்துகொள்ள மறுக்கின்றனர். நகரம் வளர்ச்சிக்கான அடையாளம் என்று கருதப்பட்டதின் விளைவு, இயற்கை சீரழிவும், வாழத்தகாத பூமியே ஆகும். நம்மை சுற்றியுள்ள வனத்தையும் வளத்தையும் அழித்துவிட்டு மாளிகையில் வாழ்வது, கண்ணாடி மாளிகையில் அமர்ந்துக்கொண்டு கல் எறிவதற்கு சமமானது. ஆறறிவு பெற்றதாலயே பல்லுயிர்களில் முதன்மையானவன் என்று கருதும் மனித இனம், அவ்வுயிர்களை காக்கும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். இதுவே எதிர்கால தலைமுறைக்கும், கொடுத்து கரம் சிவந்த இயற்கைக்கும், அதனோடு வாழ்ந்து அந்த அறிவையும் வளத்தையும் நமக்கு கடத்திய ஆதிகுடிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.
Comments